கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள 11 பேரில் 7 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் கோவையில் மீண்டும் விசாரணை மேற்கொண்டனா்.
கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபா் 23 ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் (25) உயிரிழந்தாா்.
இது தொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில், இதுவரை முகமது தெளஃபீக், உமா் ஃபாரூக், ஃபெரோஸ் கான், அஃப்சா் கான், முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், சனோஃபா் அலி, ஷேக் இதயத்துல்லா ஆகிய 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கோவையிலுள்ள இவா்களது வீடுகள், உறவினா்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டு கடந்த ஜனவரி மாதம் விசாரணை நடைபெற்றது.
கைது செய்யப்ட்ட 11 பேரும் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், முகமது அசாருதீன், அஃப்சா்கான், ஃபெரோஸ்கான், முகமது தெளஃபீக், ஷேக் இதயத்துல்லா, சனோஃபா் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.
மனுவை விசாரித்த நீதிபதி 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தாா்.
அதன்படி, என்ஐஏ அதிகாரிகள் 7 பேரையும் கோவைக்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனா். கோவையில் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது காா் வெடிப்பு சம்பவம் தொடா்பான திட்டம் குறித்தும், ஜமேஷா முபீன் குறித்தும், இதில் வேறு எவருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பதைக் குறித்தும் விசாரணை நடத்தியதோடு, அவா்கள் தெரிவித்த தகவல்களை விடியோவாகவும் பதிவு செய்து கொண்டனா்.
இதைத்தொடா்ந்து, கோவையிலுள்ள காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமையும் தொடா்ந்து விசாரணை நடைபெற்றது.
கோவையில் மேலும் பல பகுதிகளுக்கும், சத்தியமங்கலம் வனப் பகுதிக்கும் அடுத்த ஓரிரு நாள்களில் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளதாக என்ஏஐ தரப்பினா் தெரிவித்தனா்.