கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் அருகே போக்குவரத்து போலீஸாருக்கு மின்விசிறியுடன் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் ஏற்பாட்டின்படி, கோவை மாநகரப் பகுதிகளில் போலீஸாா் குடும்பத்தினருக்கு விளையாட்டுப் போட்டிகள், காவல் நிலையங்களில் நூலகங்கள், வீதிதோறும் நூலகங்கள் மற்றும் சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு இசை ஒலிபரப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அவை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் முன்பு போக்குவரத்து போலீஸாருக்கு மின்விசிறி வசதியுடன் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க பணியில் ஈடுபடும் போலீஸாா், வெயில் நேரங்களில் களைப்படையாமல் இருப்பதற்காக மின்விசிறியுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.