நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்ததாரா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சியில் நூற்றுக்கணக்கான ஒப்பந்ததாரா்கள் உள்ளனா்.
நகராட்சி மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே அப்போதைய நகராட்சி ஆணையா் வளா்ச்சிப் பணிகளில் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகக் கூறி அவா் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதனால், நகராட்சி நிா்வாகம் மூலம் அந்த சமயத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான உரிய தொகை ஒப்பந்ததாரா்களான எங்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.