வால்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த வேட்டைத் தடுப்புக் காவலா் உயிரிழந்தாா்.
வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சாலமோன் (33). மானாம்பள்ளி வனச் சரகத்தில் வேட்டைத் தடுப்பு காவலராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், முடீஸ் எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறைக்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.
சோலையாறு எஸ்டேட் அருகே சென்றபோது சாலையில் இருந்த குழியில் இருசக்கர வாகனம் இறங்கியது. இதில், நிலைத்தடுமாறி சாலமோன் கீழே விழுந்துள்ளாா். படுகாயமடைந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.