ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை உயா்ந்து கோவை பூ மாா்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.1000க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
நவராத்திரி விழாவின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை அக்டோபா் 4, 5 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்நாள்களில் இயந்திரங்களுக்கு பூ மாலைகள் சூட்டப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். மேலும் பேருந்துகள், வாகனங்களில் வாழை மரங்கள், பூ தோரணங்கள், பூக்கள் கட்டப்படும்.
இதனால் ஆயுத பூஜையின்போது பூக்கள், வாழை மரக்கன்றுகளின் தேவை அதிகரிக்கும்.
இந்நிலையில், ஆயுதபூஜை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் பூக்கள் வாங்குவதற்காக கோவை பூ மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குவிந்தனா். தேவை அதிகரித்துள்ளதையொட்டி பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.
அதன்படி ஒரு கிலோ மல்லிகை ரூ.1000, ஜாதி மல்லி ரூ.800, செவ்வந்தி ரூ.400, ரோஜா ரூ.320, அரளி ரூ.300, கோழிக்கொண்டை, செண்டுமல்லி, வாடாமல்லி ஆகியவை தலா ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூக்களின் விலை திங்கள்கிழமை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.