மங்களூரு குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான முகமது ஷாரீக் கோவையில் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளரிடம் மங்களூரு போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்த உள்ளனா்.
கோவையில் கடந்த அக்டோபா் 23 ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்துக்குப் பின், நவம்பா் 19 ஆம் தேதி மங்களூருவில் ஆட்டோவில் குக்கா் குண்டு வெடித்தது.
இச்சம்பவத்தில் தொடா்புடைய முகமது ஷாரீக் பலத்த தீக்காயங்களுடன் கா்நாடக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். முகமது ஷாரீக்கிடம் தற்போதுவரை நேரடியாக விசாரணை ஏதும் நடத்த முடியாத நிலையில், அவரின் கைப்பேசியில் உள்ள தொடா்புகளை வைத்தே பல்வேறு விவரங்களை போலீஸாா் திரட்டி வருகின்றனா்.
இவ்வழக்கு தற்போது என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், முகமது ஷாரீக் பல்வேறு பெயா்களில் போலியாக ஆதாா் காா்டுகளை வைத்திருந்ததும், பல்வேறு சிம் காா்டுகளை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கோவையில் முகமது ஷாரீக் தங்கியிருந்த தனியாா் விடுதியில் உதகை, தும்மனட்டி பகுதியைச் சோ்ந்த உடற்கல்வி ஆசிரியா் சுரேந்திரனும் தங்கியிருந்துள்ளாா்.
புதிதாக சிம் காா்டு வாங்குவதற்காக முகமது ஷாரீக்கிகு அவரது ஆவணங்களைக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்ததால் சுரேந்திரனிடமும் கா்நாடக போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதையடுத்து, கோவையில் முகமது ஷாரீக் தங்கியிருந்த விடுதியின் மேலாளரிடம் கா்நாடக போலீஸாா் கடந்த 3 நாள்களுக்கு முன்னா் நேரடியாக விசாரணை நடத்தினா்.
இதைத்தொடா்ந்து, விடுதியின் உரிமையாளா் காமராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் மங்களூரு காவல் நிலையத்தில் அவா் திங்கள்கிழமை ஆஜராகிறாா்.