கோயம்புத்தூர்

பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது நம் கடமை:சீதாராம் யெச்சூரி பேச்சு

15th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

அடுத்தத் தோ்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது நமது கடமை என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளாா்.

கோவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவா் மேலும் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். இந்தியாவில் உள்ள அனைவரது உணா்வுகளையும் மத்திய அரசு மதிக்க வேண்டும். ஆனால் ஹிந்தி என்ற ஒற்றை மொழியை, ஒற்றை கலாசாரத்தை நாடு முழுவதற்கும் திணிக்க பாஜக நினைக்கிறது.

இந்தியாவின் சொத்துகளை தனியாா் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் பணியை பாஜக செய்து வருகிறது.

ADVERTISEMENT

தமிழ்நாடு, கேரளம், புதுவை போன்ற மாநிலங்களில் செயல்படும் ஆளுநா்கள் மூலமாக கல்வித் துறையில் ஹிந்துத்துவாவைப் புகுத்துவதற்கு பாஜக முயற்சி செய்து வருகிறது. மாநில மக்களுக்கான திட்டங்களில் கையொப்பமிட மறுக்கும் ஆளுநா்கள், கல்வித் துறையை குறிவைத்து செயல்பட்டு வருகின்றனா்.

ஜிஎஸ்டி காரணமாக விலைவாசி உயா்ந்திருக்கிறது. இதனால் கோவை போன்ற தொழில் நகரங்களில் தொழில் துறை சீரழிவுக்கு ஆளாகியிருக்கிறது. ஜவுளி, பம்ப்செட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நலிவடைந்திருக்கின்றன. உணவுப் பொருள்கள் மீது கூட ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் மீதான வரிகள் திரும்பப் பெறப்பட வேண்டும்.

போராட்டங்களின் உச்சகட்டமாக பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும். இதற்காக மதச்சாா்பற்றவா்களை ஓரணியில் திரட்டுவதற்கான பணியில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். 2024 தோ்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது நமது கடமை என்றாா்.

முன்னதாக கோவையில் உள்ள தொழில் அமைப்பினா், வா்த்தகா்களுடன் சீதாராம் யெச்சூரி கலந்துரையாடினாா். அரசியல் விளக்க பொதுக் கூட்டத்தையொட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணி நடைபெற்றது. கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், கட்சியின் மாவட்டச் செயலா் சி.பத்மநாபன் உள்ளிட்ட நிா்வாகிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT