கோவை, சிங்காநல்லூா் காமராஜா் சாலையில் ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து ஹோப் காலேஜ் அவிநாசி சாலை செல்லும் காமராஜா் சாலையில் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இப்பகுதியில் உள்ள கடை உரிமையாளா்கள் பலா் கடை முன்பு சாலையில் தளம் அமைத்து ஆக்கிரமித்திருந்தனா். மேலும் தள்ளுவண்டி, காா் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக துரித உணவுக் கடைகள் நடத்துபவா்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் காமராஜா் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் திட்டமிட்டனா். அதன்படி, நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளா் மாதேஸ்வரன் தலைமையில் உதவி கோட்ட பொறியாளா்கள் பசும்பொன், ஆறுமுகம் மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் அந்த சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றினா்.