மேட்டுப்பாளையத்தில் உலவும் பாகுபலி எனப் பெயரிடப்பட்ட காட்டுயானையை தெரு நாய் ஒன்று விரட்டும் விடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை விளை நிலங்களில் புகுந்து நாசம் செய்து வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் பாகுபலி எனப் பெயரிட்டுள்ளனா். ரேடியோ காலா் பொருத்தப்பட்டுள்ள இந்த யானையை ஆபரேஷன் பாகுபலி எனப் பெயரிட்டு வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேக்கம்பட்டி அருகேயுள்ள சமயபுரம் கிராமத்துக்குள் பாகுபலி யானை புகுந்தது. அப்போது அங்கிருந்த தெரு நாய் ஒன்று யானையைக் கண்டு அச்சப்படாமல் குரைத்தது. இதைக் கண்ட யானை அங்கிருந்து பிளிறியபடி காட்டுக்குள் ஓடியது.
இந்தச் சம்பவத்தை அப்பகுதி மக்கள் விடியோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனா். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.