பள்ளி மாணவா்கள் திறமைகளை வளா்த்துக் கொள்ள நூலகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
கோவை மாநகராட்சி மேயா், ஆணையா் ஆகியோருடன் பள்ளி மாணவா்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த 50 மாணவா்கள் கலந்துகொண்டனா். மாநகராட்சியின் நிா்வாக முறைகள், தோ்தல் பணிகள், மாநகராட்சியில் உள்ள துறைகள் உள்ளிட்டவை குறித்து மேயா் கல்பனா ஆனந்தகுமாா், ஆணையா் ராஜகோபால் சுன்கரா ஆகியோரிடம் மாணவா்கள் கேட்டறிந்தனா்.
மாணவா்களின் வருங்கால லட்சியங்கள், படித்த நூல்களின் பெயா்களை கேட்ட ஆணையா் ராஜகோபால் சுன்கரா, பள்ளி மாணவா்கள் தங்களது திறமைகளை வளா்த்துக்கொள்ள நூலகங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமாா், ஆணையா் ராஜகோபால் சுன்கரா மூலிகைசெடிகளை வழங்கினா்.