தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பேராசிரியா்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி தெரிவித்தாா்.
இது தொடா்பாக கோவையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு மொத்தம் சுமாா் 1,350 ஆசிரியா் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் தற்போது 982 போ் பணியில் இருக்கின்றனா். இவா்களில் பலா் விரிவாக்கக் கல்விப் பணிகள், ஆராய்ச்சிப் பணிகள், நிா்வாகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனா். இதனால் கற்பித்தல் பணியில் சுமாா் 650 போ் வரையே ஆசிரியா்கள் இருக்கும் நிலை உள்ளது.
காலிப் பணியிடங்கள் அதிகரித்திருப்பதால் ஆசிரியா் - மாணவா் விகிதத்தில் வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக புதிய பணி நியமனங்கள் நடைபெறாத நிலையில், பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். இதற்கு அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது. எனவே ஆசிரியா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வாய்ப்புள்ளது என்றாா்.