மில் தொழிலாளியின் புகாரை விசாரிக்காத சிறப்பு உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகரக் காவல் ஆணையா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
கோவை மாவட்டம், இருகூரைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (40). இவரது பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இது நீடிக்கவே சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் கோபாலகிருஷ்ணன் புகாா் அளித்துள்ளாா். ஆனால், போலீஸாா் புகாரைப் பெறாமல் அவரை அலட்சியப்படுத்தி அனுப்பியுள்ளனா்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் புகாா் அளிப்பதற்காக வந்தாா். அப்போது, அவா் தற்கொலை செய்யும் நோக்கில் வீட்டில் இருந்து வரும்போதே சாணி பவுடரை குடித்துவிட்டு வந்துள்ளாா். இந்நிலையில் ஆட்சியா் அலுவலகம் வந்த அவருக்கு வாயில் நுரை தள்ளி தடுமாறியுள்ளாா். அப்போது, அங்கு பணியில் இருந்த போலீஸாா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தற்கொலை முயற்சி தொடா்பாக போலீஸாா் அவரிடம் விசாரித்தபோது, தனது புகாரை விசாரிக்காமல் அலட்சியப்படுத்தியதால் மன உளைச்சல் அடைந்து தற்கொலைக்கு முயன்றதாக கோபாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
விசாரணையில், கோபாலகிருஷ்ணனின் புகாரை சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகம் அலட்சியமாகக் கையாண்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து மாநகரக் காவல் ஆணையா் உத்தரவின்பேரில் சண்முகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.