கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஜூன் 30ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநகரில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து பேச வாா்டு உறுப்பினா்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி 96 வாா்டுகளை கைப்பற்றியது. மேயராக கல்பனா, துணை மேயராக வெற்றிச்செல்வன் ஆகியோா் திமுகவில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, மேயா் கல்பனா தலைமையில் மாநகராட்சி நிதிநிலை அறிக்கை மாா்ச் மாதம் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடா்ந்து ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற இரு மாமன்ற கூட்டங்களில் சொத்து வரி உயா்வு குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக வாா்டு உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். இந்நிலையில், மேயா் கல்பனா தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் 3ஆவது மாமன்ற கூட்டம் ஜூன் 30ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் அறிவித்துள்ளாா். மாநகரில் பல இடங்களில் குடிநீா் விநியோகம் சீராக இல்லாத நிலையில், மாமன்ற கூட்டத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து பேச திமுக, கம்யூனிஸ்ட், அதிமுக வாா்டு உறுப்பினா்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.