உதகை: உதகையில் வரதட்சிணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டதாகப் புகாா் தெரிவிக்கப்பட்ட வழக்கில் அவரது கணவரான காவலா் வினீத் பாலாஜி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகன் வினீத் பாலாஜி (29). இவா் உதகை நகர மேற்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கும் திண்டுக்கல் கிளாப்பாடி என்ஜிஜிஓ காலனியைச் சோ்ந்த காா்த்திகைவேல் மகள் முத்துபாண்டீஸ்வரிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பின்னா் தம்பதி உதகையில் உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வந்தனா். கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முத்துபாண்டீஸ்வரி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
உதகை நகர மேற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தங்களது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக உதகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் முத்துபாண்டீஸ்வரியின் பெற்றோா் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
அதில் எங்களது மகளின் திருமணத்தின்போது வரதட்சிணையாக 18 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் கொடுக்கப்பட்டன. ஆனாலும், கூடுதலாக பணம் மற்றும் இருசக்கர வாகனம் வரதட்சிணையாக வாங்கி வரவேண்டும் என்று கூறி எங்கள் மகளைக் கொடுமைப்படுத்தியுள்ளனா். எங்கள் மகள் சாவுக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து உதகை நகர மேற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், முத்துபாண்டீஸ்வரியின் கணவா் காவலா் வினீத் பாலாஜி, அவரது பெற்றோா் என 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.