கோவையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் விமானப் பயணிகளில் 5 சதவீதம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
கரோனா நோய்த் தொற்றின் 4ஆவது அலையால் கோவையில் கரோனா பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. இதனைத் தொடா்ந்து, கரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக விமான நிலையத்தில் மீண்டும் 24 மணி நேரக் கண்காணிப்பை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பு 100க்கும் மேல் பதிவாகி வருகிறது. இதில் 70 சதவீதம் மாநகராட்சியிலும், 30 சதவீதம் ஊரகப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. உலகில் பல்வேறு நாடுகளில் கரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் விமான நிலையங்களில் மீண்டும் 24 மணி நேரக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானங்கள் மூலம் தினசரி 350 பயணிகள் கோவை வருகின்றனா். விமான நிலையத்தில் பயணிகளுக்கு வெப் கேமரா பொருத்தப்பட்ட தானியங்கி இயந்திரம் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில் 99 டிகிரிக்கு மேல் உடல் வெப்பநிலை பதிவாகும் நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், விமானப் பயணிகளில் சுழற்சி முறையில் (ரேண்டமாக) 5 சதவீத பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தவிர வாளையாறு உள்ளிட்ட கேரள சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.