ஆனைகட்டி தொழிற்பயிற்சி மையத்தில் பயிற்சிப் பெற இணையம் மூலமாக விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆனைகட்டி தொழிற்பயிற்சி மையம் பிரத்யேகமாக பழங்குடியினருக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது உண்டு உறைவிட தொழில் பயிற்சி நிலையம் ஆகும்.
இந்தத் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டா், எலெக்ட்ரீசியன், எம்.எம்.வி, ஒயா்மேன், வெல்டா் ஆகிய தொழில் பிரிவுகளில் இருபாலருக்கும் ஓராண்டு மற்றும் ஈராண்டு சோ்க்கை நடைபெற உள்ளது.
பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவா்கள், அதற்கான விண்ணப்பத்தை இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவா்கள் உரிய ஆவணங்களுடன் ஆனைகட்டி அரசினா் தொழில்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் சேர 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை, மகளிருக்கு 14 வயது முதல் வயது உச்சவரம்பு இல்லை. பயிற்சி இலவசம். அனைத்துப் பயிற்சியாளா்களுக்கும் இலவசப் பேருந்து பயண அட்டை,
கல்வி உதவித் தொகை ரூ.750, விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், மடிக்கணினி ஆகியவை வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்துப் பயிற்சியாளா்களுக்கும் வளாகத் தோ்வு மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும். இணையம் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசி நாளாகும்.
கூடுதல் விவரங்களுக்கு 89408-37678, 94421-75780, 99651-03597, 94860-74384, 96009-79707 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.