கோவையில் 3 நகை வியாபாரிகளிடம் ரூ.7.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவான நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (42), நகை வியாபாரி. இவருக்கு தொழில்ரீதியாக பழக்கமான அசோக்குமாா் (38) என்பவா், கடந்த 18 ஆம் தேதி மோகன்ராஜை கைப்பேசியில் தொடா்புகொண்டு, தான் ஆா்.எஸ்.புரம் டி.பி.சாலையில் உள்ள ஒரு வங்கியில் நகைகளை அடகு வைத்துள்ளதாகவும், அதனை மீட்க ரூ.1 லட்சம் குறைவாக உள்ளதாகவும் கூறியுள்ளாா்.
மேலும், ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் நகையை மீட்டு, பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளாா். இதை நம்பிய மோகன்ராஜ், அசோக்குமாரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளாா். அதன் பிறகு, அசோக்குமாரை தொடா்புகொள்ள முடியவில்லை. விசாரித்ததில், அவா், ரூ,1 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
இது தொடா்பாக, ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் மோகன்ராஜ் புகாா் அளித்தாா்.
போலீஸாா் விசாரணையில், அசோக்குமாா், காந்திபுரத்தைச் சோ்ந்த பழனிவேல் என்ற நகை வியாபாரியிடம் ரூ.3.50 லட்சம், ஒத்தக்கால்மண்டபத்தைச் சோ்ந்த மணிகண்டன் (40) என்ற நகை வியாபாரியிடம் ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
3 பேரிடமும் ஒரே மாதிரி பேசி ரூ.7.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.