கோவை தேவாலயத்தில் இருந்த புனித செபாஸ்தியா் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய மேலும் இரு இந்து முன்னணி உறுப்பினா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, ராமநாதபுரம் சந்திப்பு அருகில் ட்ரினிட்டி தேவாலயம், பள்ளி உள்ளது. இதன் வாயிலில் புனித செபாஸ்தியரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை இந்த சிலையை அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் சேதப்படுத்தினா்.
இது தொடா்பாக ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் வழக்கில் தொடா்புடைய கோவை வெள்ளலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மதன்குமாா் (23), ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் ஆகியோரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.
மத மாற்றத்துக்கு வற்புறுத்தியதாகக் கூறி அரியலூா் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் புனித செபாஸ்தியா் சிலையை சேதப்படுத்தியது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், இவ்வழக்கில் மருதாசலமூா்த்தி, தீபக் என்ற இரு இந்து முன்னணி உறுப்பினா்களுக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த அவா்களை வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.