கோவையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் வங்கிக் கடன் உதவியை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை வழங்கினாா்.
தமிழகத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் காரமடை, பெ.நா.பாளையம், அன்னூா், எஸ்.எஸ்.குளம் ஆகிய வட்டாரங்கலில் 54 ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்புற மக்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட அளவிலான பணிக்குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தைச் சோ்ந்த 5 பயனாளிகளுக்கு 30 சதவீதம் (4.5 லட்சம்) மானியத்துடன் கூடிய ரூ.15 லட்சம் வங்கிக் கடன் உதவியை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) க.செல்வம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலா் ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.