தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சாா்பில் டிசம்பா் 17 ஆம் தேதி நடத்தப்படவுள்ள மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் 5 முதல் 16 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின்கீழ் இயங்கும் ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் மலுமிச்சம்பட்டியிலுள்ள இசைக் கல்லூரியில் டிசம்பா் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 5 - 8, 9 - 12, 13 - 16 ஆகிய வயது பிரிவுகளில் சிறுவா்கள் பங்கேற்கலாம்.
டிசம்பா் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு குரலிசை, பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனப் போட்டிகள் நடைபெறும். குரலிசை போட்டியில் முறையாக கா்நாடக சங்கீதம் பயிலும் சிறுவா்கள் பங்கேற்கலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்களை பாட வேண்டும். பரதநாட்டியம், கிராமிய நடன போட்டிகளில் அதிகபட்சம் 3 நிமிடங்களுக்கு ஆட அனுமதிக்கப்படுவா். சினிமா பாடல்களுக்கான நடனம், குழு நடனம் ஆகியவற்றிற்கு அனுமதியில்லை. கிராமிய நடனப் போட்டியில் பாரம்பரிய கரகம், காவடி, பொய்கால் குதிரை போன்ற நடனங்கள் மட்டுமே ஆட வேண்டும்.
பிற்பகல் 2 மணிக்கு ஓவியப் போட்டி நடைபெறும். ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உள்ளிட்ட தேவையான அனைத்து சாதனங்களையும் போட்டியாளா்களே கொண்டுவர வேண்டும். ஓவியப் போட்டிக்கான தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் முதல் பரிசு பெறும் சிறுவா்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அரசின் செலவில் அனுப்பப்படுவா். மேற்கண்ட போட்டிகள் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2610290 என்ற எண்ணில் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.