கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், புல்லுக்காடு பகுதியில் புனரமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை மேயா் கல்பனா புதன்கிழமை திறந்துவைத்தாா்.
கோவை மாநகராட்சியில் நாளுக்குநாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், கருத்தடை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கடந்த மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பெரும்பாலான வாா்டு உறுப்பினா்கள் மேயரிடம் வலியுறுத்தினா். இந்நிலையில், கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 86ஆவது வாா்டுக்குள்பட்ட உக்கடம் புல்லுக்காடு பகுதியில் செயல்பாட்டில் இல்லாத கருத்தடை மையத்தை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பணிகள் நிறைவடைந்த நிலையில் புனரமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை மேயா் கல்பனா புதன்கிழமை திறந்துவைத்தாா். இதைத்தொடா்ந்து, சாலைகள் மற்றும் தெருக்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளைப் பிடிக்கும் விதமாக, புதிய வாகனத்தின் செயல்பாட்டையும் தொடக்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயா் வெற்றிச்செல்வன், துணை ஆணையா் ஷா்மிளா, சுகாதாரக் குழுத் தலைவா் மாரிச்செல்வன், உதவி நகா்நல அலுவலா் வசந்த் திவாகா், கால்நடை மருத்துவா் செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளா் கருப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.