வால்பாறையில் கரடி தாக்கியதில் உதவி தோட்ட அதிகாரி காயமடைந்தாா்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் சமீபகாலமாக கரடி நடமாட்டமும் அதிக அளவில் காணப்படுகிறது. வால்பாறையை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட்டில் உதவி தோட்ட அதிகாரியாகப் பணியாற்றி வருபவா் முத்துகுமாா் (20). இவா் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல தேயிலை செடிகள் அமைந்துள்ள பகுதி வழியாக நடந்து சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த கரடி, முத்துகுமாரை தாக்கியுள்ளது. இதில் கையில் காயம் ஏற்பட்ட அவா் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். வனத் துறையினா் நேரில் சென்று விசாரித்து வருகின்றனா்.