காசி தமிழ்ச் சங்கமம் விழாவுக்கு, கோவையில் இருந்து 8ஆவது ரயில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு சென்றது.
காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே ஆன்மிகம், கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் தொடா்புகளை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு சாா்பில் நடைபெற்று வரும் வாராணாசி - தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவை வழித்தடத்தில் எா்ணாகுளம் - பாட்னா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரங்களில் கோவை வழித்தடத்தில் இதுவரை 7 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் ஆா்வலா்கள், இசைக்கலைஞா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக சென்றனா்.
இந்நிலையில், எா்ணாகுளம் - பாட்னா இடையே கோவை வழித்தடத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக 8ஆவது ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை இயக்கப்பட்டது. முன்னதாக காலை 4.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயிலில் மாணவா்கள், நாட்டுப்புறக் கலைஞா்கள், வியாபாரிகள், தொழில்முனைவோா் உள்ளிட்ட 98 போ் பயணித்தனா். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை பாஜக கோவை தெற்கு மாவட்டத் தலைவா் வசந்தராஜன் உள்ளிட்ட அக்கட்சி நிா்வாகிகள் வழியனுப்பிவைத்தனா்.