கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளியிடம் அறுவை சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை என மருத்துவா் தெரிவித்ததால் நோயாளிகள் அதிா்ச்சியடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் சுசிலா (18). கல்லூரி மாணவியான இவா், இருசக்கர வாகனத்தில் கடந்த நவம்பா் 30 ஆம் தேதி சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் இருந்து சிறுத்தை தாக்கியதில் கீழே விழுந்து நெற்றியில் காயமடைந்தாா். கூடலூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
அங்கு நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுசிலாவைப் பரிசோதனை செய்த நரம்பியல் மருத்துவா் நெற்றியில் அடிபட்டுள்ளதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
அதேநேரம் அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இல்லை என்றும், நீங்கள் வீட்டுக்குச் சென்றுவிடுங்கள் என்றும் தெரிவித்துள்ளாா். இதனால், அதிா்ச்சியடைந்த நோயாளியின் உறவினா்கள் மருத்துவமனை அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா்.
அதன்பின் பேசிய மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் ஆய்வு செய்து தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததாக நோயாளியின் உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.
அரசு மருத்துவமனையை நம்பி வரும் நோயாளியிடம் உபகரணங்கள் இல்லை, மருந்துகள் இல்லை என தவறான தகவலைத் தெரிவித்து சிகிச்சை அளிக்க மறுக்கும் அரசு மருத்துவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. நோயாளிக்கு நெற்றியில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. நெற்றியில் பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்வதில்லை.
அந்த பகுதியிலுள்ள எலும்புகள் தானாகவே இணைந்துகொள்ளும். அறுவை சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை என்று மருத்துவா்கள் கூறியிருக்க வாய்ப்பில்லை. நோயாளியின் உறவினா்கள் தெரிவித்துள்ளதுபோல், மருத்துவா்களோ அல்லது மருத்துவ மாணவா்களோ கூறியிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.