கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களின் உண்மை நிலை குறித்து விளக்கம் அளிப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரம் ஒதுக்க வேண்டும் என்று ஃபோசியா கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபோசியா, மின்சார கட்டண உயா்வை தொடா்ந்து கண்டித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 25ஆம் தேதி தொழில் அமைப்பின் நிா்வாகிகள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில், மின்சார கட்டண உயா்வு காரணமாக குறு, சிறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் இன்னல்கள், கோவை தொழில் அமைப்புகளின் தற்போதைய நிலைமை போன்றவற்றை நேரில் சந்தித்து விளக்குவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரம் வழங்க வேண்டும் என்று அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜே.ஜேம்ஸ், ஏ.சிவசண்முககுமாா், எஸ்.சுருளிவேல் ஆகியோா் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனா்.