கோவை, சிறுவாணி சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக இருந்த அரசமரம், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வடகோவை பகுதியில் வியாழக்கிழமை மறுநடவு செய்யப்பட்டது.
கோவையில் மேம்பாலப் பணிகள், சாலை விரிவாக்கப் பணிகளின்போது, இடையூறாக உள்ள மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு, மறுநடவு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவை செல்வபுரம், சிறுவாணி சாலையில் விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக இருந்த 40 வயதான அரசமரம் வேருடன் அண்மையில் அகற்றப்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அந்த மரத்தை மறுநடவு செய்ய திட்டமிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளா் கண்ணன் தலைமையில், உதவி கோட்டப் பொறியாளா் ஆறுமுகம், உதவிப் பொறியாளா் பசும்பொன் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கோவை மண்டல தலைமை வனப் பாதுகாவலா் ராமசுப்ரமணியம் உள்ளிட்டோா் மற்றும் 120 வனத் துறை பயிற்சி மாணவா்கள் இணைந்து செல்வபுரத்தில் இருந்து அண்மையில் அகற்றப்பட்ட அரசமரத்தை லாரி, கிரேன் உதவியுடன் வடகோவையில் உள்ள ஒருங்கிணைந்த வனத் துறை வளாகத்தில் வியாழக்கிழமை மறுநடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வை, கோவை மாவட்ட பசுமைக்குழு உறுப்பினா் கா.சையத் ஏற்பாடு செய்திருந்தாா். கோவை மாநகரக் காவல் துணை ஆணையா் மதிவாணன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.