வால்பாறை எஸ்டேட் பகுதிகளுக்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த ரேஷன் கடை, கோயிலை சேதப்படுத்தின.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரம் எஸ்டேட் பகுதிக்குள் நுழையும் யானைகள் குடியிருப்புகள், ரேஷன் கடைகளை முட்டித் தள்ளி சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பன்னிமேடு எஸ்டேட் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கூட்டமாக நுழைந்த யானைகள் அங்குள்ள ரேஷன் கடையை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.
இதேபோல சின்கோனா எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த யானை கூட்டத்தில் இருந்த குட்டி யானை அங்குள்ள துா்க்கையம்மன் கோயிலுக்குள் நுழைந்து பொருள்களை சேதப்படுத்தின. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை விரட்டினா்.