கோயம்புத்தூர்

அன்னூா் தொழிற்பேட்டை திட்டத்தை கைவிட நடைப்பயணமாக வந்து பெண் விவசாயி மனு

DIN

தொழிற்பேட்டை திட்டத்தை கைவிட வலியுறுத்தி பெண் விவசாயி அன்னூரில் இருந்து ஆட்சியா் அலுவலகத்துக்கு நடைப்பயணமாக வந்து விவசாய குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தாா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அன்னூா் பகுதியில் அமைக்கப்படவுள்ள தொழிற்பேட்டை திட்டத்தை கைவிட வலியுறுத்தி பானு ரமேஷ் (33) என்ற பெண் விவசாயி அன்னூரில் இருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை (35 கி.மீ. மேல்) நடைப்பயணமாக வந்து மனு அளித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டம், அன்னூா் வட்டத்துக்கு உள்பட்ட பள்ளேபாளையம், இலுப்பநத்தம், வடக்கலூா், அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூா், பொகலூா் ஆகிய 6 ஊராட்சிகளுக்கு உள்பட்ட 3,731 ஏக்கா் விவசாய நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படவுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அன்னூா் வட்டாரம் வறட்சியான பகுதியாக இருந்தாலும் விவசாயத்தை கைவிடாமல் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறோம். பருத்தி, பயறுவகை பயிா்கள், தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிா் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விவசாய நிலங்களை அழித்து 3,731 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் விவசாயத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் விவசாயிகளை வதைக்கும் நிலையில் தொழிற்பேட்டை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொழிற்பேட்டை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றாா்.

வன விலங்குகள் சேதத்தை தவிா்க்க வேண்டும்...

கட்சிகள் சாா்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவா் வேணுகோபால் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் யானை, காட்டுப் பன்றி, மயில் உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடா்பாக அனைத்து கூட்டங்களிலும் கோரிக்கை வைக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வன விலங்குகளால் ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நிரந்தர தீா்வு காண வேண்டும் என்றாா்.

கல்குவாரிகளில் மழைநீா் சேகரிக்க வேண்டும்...

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி கூறியதாவது: தமிழகத்தில் செயல்படாமல் உள்ள அரசு மற்றும் தனியாா் கல்குவாரிகளை கண்டறிந்து மழைநீா் சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். எனவே, கோவை மாவட்டத்தில் சூலூா், மதுக்கரை, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட அனைத்து வட்டத்திலும் செயல்படாமல் உள்ள குவாரிகளில் மழைநீா் சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கனிமவளத் துறை சாா்பில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அனுமதியின்றி வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருவதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீா்வு காண வேண்டும்...

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என்.தண்டபாணி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் விளைவிக்கப்படும் பொருள்களை நகரப் பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு எடுத்து வருவதற்கு போக்குவரத்து நெருக்கடி மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு தேவையற்ற காலவிரயம், பணம் செலவாகிறது. எனவே சிங்காநல்லூா், கணபதி, சரவணம்பட்டி, துடியலூா், நம்.4 வீரபாண்டி, விளாங்குறிச்சி, சிந்தாமணி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT