கோவை மாநகராட்சி மேற்கு மண்டலப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் குறித்து மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 45ஆவது வாா்டுக்கு உள்பட்ட சாய்பாபா காலனி, அன்னை சத்யா நகரில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் நகா்நல மைய கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து, மேற்கு மண்டலம் 45ஆவது வாா்டுக்கு உள்பட்ட சாய்பாபா காலனி, சின்னசுப்பண்ணா வீதியில் உள்ள மக்களிடம் குடிநீா் சீராக விநியோகிக்கப்படுகிறதா எனக் கேட்டறிந்தாா். பின்னா், மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து, தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையா் சேகா், உதவி செயற்பொறியாளா் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலா் கலாவதி, உதவி பொறியாளா் ஹரிபிரசாத், சுகாதார அலுவலா் பரமசிவன், சுகாதார ஆய்வாளா் சலைத் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
நகா்நல மையம் கட்டுமானப் பணி: மேயா் துவங்கிவைத்தாா்:
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 100ஆவது வாா்டு, அன்பு நகா் பகுதியில், மாநகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலும், ஆடிட்டா் வீதியில் ரூ.3.90 லட்சம் மதிப்பிலும் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின் மோட்டாா் பொருத்தி கிணற்று நீா் விநியோகம் செய்யும் பணி, மேட்டூா் ஈஸ்வரன் செட்டியாா் வீதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் நகா்நல மையக் கட்டுமானப் பணி ஆகியவற்றை கோவை மாநகராட்சி மேயா் கல்பனா வியாழக்கிழமை துவங்கிவைத்தாா். மேலும், முதியோா்களுக்கு உதவித்தொகை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், தெற்கு மண்டலத் தலைவா் தனலட்சுமி, உதவி ஆணையா் அண்ணாதுரை, மருத்துவ அலுவலா் உதயகுமாா், வாா்டு உறுப்பினா்கள் அப்துல்காதா், குணசேகரன், உதயகுமாா், அஸ்லாம்பாட்ஷா, உதவி செயற்பொறியாளா் கருப்புசாமி, உதவிப்பொறியாளா் சபரிராஜ், மண்டல சுகாதார அலுவலா் ராமு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.