உரிய ஆவணங்களின்றி நகைக் கடை உரிமையாளா் வைத்திருந்த ரூ.11.85 லட்சம் ரொக்கம், ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கத்தை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
செகந்திராபாதில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி விரைவு ரயில், புதன்கிழமை காலை கோவை வந்தது. இதில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் வழக்கம்போல சோதனை செய்தனா். அப்போது ரயிலில் இருந்த பயணி ஒருவரின் நடவடிக்கை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததையடுத்து போலீஸாா் அவரை விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிக்கவே சந்தேகமடைந்த போலீஸாா், அவரது கைப்பையைச் சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.11 லட்சத்து 85 ஆயிரத்து 790 பணமும், ரூ.30 லட்சம் மதிப்பிலான 500கிராம் எடை கொண்ட நகைகளும் இருந்தன. இதையடுத்து அவரை ரயில்வே போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.
விசாரணையில் அவா், கோவை, திருநகா் அருகேயுள்ள குறிஞ்சி காா்டனைச் சோ்ந்த உதயானந்தம் (50) என்பது தெரியவந்தது. நகைக் கடை நடத்தி வருவதாகவும், கோவையில் நகைகளைத் தயாரித்து திருப்பதிக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவதாகவும் கூறினாா்.
ஆனால், உதயானந்தம் எடுத்துச் சென்ற நகை, பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் இது குறித்து வருமான வரித் துறையினருக்கு தகவல் தெரிவித்த ரயில்வே போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.