கோவை அருகே தந்தங்கள் வெட்டப்பட்ட நிலையில் ஆண் யானை சடலம் மீட்கப்பட்டது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, போளுவாம்பட்டி வனச்சரகம், கரியன் படுகை சராகப் பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது ரோந்து சென்ற வனத் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.
இறந்த யானையின் உடலினை காட்டு விலங்குகள் உண்டு சேதப்படுத்தியிருந்தன.
இதனையடுத்து வனப் பணியாளா்கள், உயா் அலுவலா்களுக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா் தலைமையிலான வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் உயிரிழந்தது சுமாா் 30 வயதுடைய ஆண் யானை என்பதும், உயிரிழந்த ஆண் யானையின் இரண்டு தந்தங்களை வெட்டி எடுத்திருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து வனத் துறை மருத்துவா்கள் உயிரிழந்த யானையின் உடலை உடற்கூராய்வு செய்தனா். யானை இறந்து சுமாா் 40 நாள்கள் ஆகி இருக்கலாம் எனத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
யானை உயிரிழந்த பகுதி கேரள வனப் பகுதியை ஒட்டியுள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளதால், வேட்டை கும்பல் யானையை கொன்று தந்தங்களை கடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.