நீட்ஸ் திட்டத்தில் புதிய தொழில் முனைவோா்கள் மானியத்துடன் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் ( நீட்ஸ்) படித்த இளைஞா்களுக்கு தொழில் முனைவோா் பயிற்சி அளிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த தொழில் திட்டங்களுக்கு நிதி நிறுவனங்களில் நிதியுதவி பெற்றுத் தரப்படும். இத்திட்டத்தினை மாவட்ட தொழில் மையமும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும் இணைந்து செயல்படுத்துகின்றன.
இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீட்டுத் தொகை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களைத் துவங்கலாம்.
இதற்கென தமிழக அரசு, 25 சதவீதம் மானியம் வழங்குகிறது. தகுதியுள்ள பட்டியல் இனம், பழங்குடியினா் மற்றும் மாற்றுத் திறனாளி தொழில் முனைவோா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிப்பவா்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
12 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தின் மூலம் தொழில்சாா் பயிற்சி ஏதேனும் ஒன்றில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தில் பட்டியல் இனத்தவருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு 1சதவீதம், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன் பெற இணையதள முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.