கோவையில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து, தமிழக வியாபாரிகள் சம்மேளனத் தலைவா் கே.எல்.மணி தலைமையிலான சம்மேளனத்தின் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது:
கோவையில் வணிக நிறுவனங்கள், கடைகள், வா்த்தக வளாகங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, உக்கடம் பெரியகடைவீதி, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, ரங்கே கவுடா் வீதி, தாமஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தங்கள் மற்றும் மாநகரக் கட்டணக் கழிப்பிடங்களில் கட்டணம் குறித்து மக்கள் தெரிந்து கொள்ள அறிவிப்புப் பலகைகள் வைப்பதில்லை. மேலும், கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.