கோவை மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் தக்காளி விலையும் குறைந்துள்ளது.
கோவையில் கடந்த வாரம் பெய்து வந்த தொடா் மழையின் காரணத்தால் தக்காளி வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையும் பல மடங்கு உயா்ந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தக்காளி ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்டது. உழவா் சந்தை உள்பட பல்வேறு இடங்களில் தக்காளி கிடைக்காமல் நுகா்வோா்கள் பாதிக்கப்பட்டனா். நுகா்வோா்களுக்கு எளிதில் தக்காளி கிடைக்கும் விதமாக பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக மழை இல்லாததால் தக்காளி வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.120க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.50 முதல் 55 ஆக குறைந்துள்ளது. உழவா் சந்தைகளில் ரூ.50 முதல் ரூ.55க்கும், வெளி சந்தைகளில் ரூ.60 முதல் 70க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது தொடா்பாக வேளாண் வணிகத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவையில் மழையின் தாக்கத்தால் உழவா் சந்தைகளுக்கு கடந்த வாரம் 15 டன் தக்காளி வரத்து காணப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் தக்காளி வரத்து 20 டன் ஆக உயா்ந்துள்ளது. இதனால் விலையும் ரூ.50 முதல் ரூ.55 ஆக உள்ளது என்றனா்.