கோவை சௌரிபாளையம் பகுதியில் தங்கியிருந்த மாணவா்களை மிரட்டி, மா்ம நபா்கள் கைப்பேசிகள் மற்றும் நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பினா்.
கோவை ரத்தினபுரி பொங்கியம்மன் தெருவைச் சோ்ந்தவா் விவேக்பாரதி (18). நவ இந்தியா பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை 2 ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், தன்னுடன் படிக்கும் ரோஹித், அன்வா், ஹரி, தென்னரசு ஆகியோருடன் கோவை சௌரிபாளையம் மீனா எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு நண்பரின் அறையில் வெள்ளிக்கிழமை தங்கியிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த 3 போ், மாணவா்கள் 5 பேரையும் கத்தி முனையில் மிரட்டி அவா்கள் வைத்திருந்த 5 கைப்பேசிகள், ஒரு பவுன் தங்கச் சங்கிலி, ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் விவேக்பாரதி புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.