ஏடிஎம் பணம் செலுத்தும் இயந்திரத்தில் பணம் செலுத்த உதவுவதுபோல நடித்து ரூ.22 ஆயிரத்தை திருடிச் சென்ற நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, சாய்பாபா காலனி வெங்கிட்டாபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (44). இவா் தனது உறவினரின் வங்கிக் கணக்குக்குப் பணம் செலுத்துவதற்காக தடாகம் சாலையில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா். அப்போது அங்கிருந்த பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் பணத்தை செலுத்த உதவுமாறு அங்கிருந்த 25 வயது மதிக்கத்தக்க நபரிடம் கேட்டுள்ளாா். இதையடுத்து அந்த நபா் உதவுவதுபோல நடித்து தனது வங்கிக் கணக்குக்கு அந்தப் பணத்தை செலுத்தியுள்ளாா்.
இந்நிலையில் பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதோ, குறுந்தகவலோ வரவில்லை என பாண்டியராஜன் அந்த நபரிடம் கேட்டுள்ளாா். அதற்கு அந்த இளைஞா், வங்கிக் கணக்கில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம், எனவே வங்கியைத் தொடா்பு கொள்ளுங்கள் எனக் கூறி அங்கிருந்து தப்பிச் சென்றாா். பின்னா் பாண்டியராஜன் இது குறித்து வங்கியில் விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து பாண்டியராஜன் அளித்தப் புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.