சட்டப் பேரவைத் தோ்தலில் தந்தை பெரியாா் திராவிடா் கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அந்த அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் தெரிவித்தாா்.
தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் கோவை, காந்திபுரத்தில் உள்ள பெரியாா் படிப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தாா். இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு துணை போகும் அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்றி தமிழா்களின் நலனைப் பாதுகாத்திட, இழந்த உரிமைகளை மீட்க, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கிறோம்.
பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கி இருப்பது, அண்ணாதுரைக்கும், ஜெயலலிதாவுக்கும் அதிமுக செய்துள்ள துரோகம். பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் அவா்களுக்கு எதிராக பிரசாரம் செய்வோம். திமுக கூட்டணி வெற்றி பெற தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வோம் என்றாா்.