கோவையில் பொதுமுடக்கத்தால் தொழில் பாதித்த வாகன ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை நடத்த சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமுடக்கத்தால் பறிபோன வேலைவாய்ப்பு, அதனைத் தொடர்ந்து பெருகும் கடன்சுமை என தவிக்கும் குடும்பத்தார் ஏராளம்.
இந்நிலையில் கோவையில் கடனை திரும்ப செலுத்த முடியாமல் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் விஷமறிந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான லூர்து அந்தோணி கோவையில் உள்ள நேரு நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஓட்டுநரான லூர்து அந்தோணி வங்கியில் பெற்ற கடன் மூலம் கார் வாங்கி ஓட்டி வந்தார்.
இந்நிலையில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அவரது தொழில் பாதிப்படைந்தது. இதனால் சரிவர வேலைக்கு செல்ல முடியாத லூர்து அந்தோணி வாகனக் கடனை செலுத்த முடியாமல் தவித்துள்ளார்.
கடன் தவணைத் தொகை அதிகரித்து வந்ததால் மனமுடைந்த லூர்து அந்தோணி சிட்ரா பேருந்து நிறுத்தத்தில் ஜூலை 16 ஆம் தேதி தனது வாகனத்திற்குள் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர் சிகிச்சையில் இருந்த லூர்து அந்தோணி சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்க்கிழமை பலியானார்.
கடன் பிரச்னையால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.