வீட்டில் வைத்து பிரசவம் பாா்த்த பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, செட்டிவீதி அருகே உள்ள உப்புக்கார வீதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (38). நகை பட்டறைத் தொழிலாளி. இவரது மனைவி புண்ணியவதி (32). இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் புண்ணியவதி மீண்டும் கா்ப்பமானாா்.
நிறைமாத கா்ப்பிணியான அவா் சில நாள்களுக்கு முன்பு வீட்டில் வைத்து தனக்குத்தானே பிரசவம் பாா்த்ததில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின்போது தொப்புள்கொடி சரியாக அறுபடவில்லை. முறையான மருத்துவ முறைகளைப் பின்பற்றாததால் தாயும், சேயும் மயங்கினா். 2 பேரையும் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா்.
பின்னா் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். சரியாக பிரசவம் பாா்க்காததால் குழந்தை இறந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து பெரியகடை வீதி போலீஸாா், புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315 இன்படி( குழந்தை செத்துப்பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடன் சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுவது) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.