கோவையில் காணொலிக் காட்சி வாயிலாக 2 நாள்கள் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 15 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவராக இருந்த ஏ.பி.பாலசந்திரன் 2020 ஜனவரி 11இல் பணி ஓய்வு பெற்றாா். இதையடுத்து குறைதீா் ஆணையத்தின் தலைவா் நியமிக்கப்படாத காரணத்தால் வழக்குகளின் விசாரணை நடைபெறாமல் சுமாா் 1,400 வழக்குகளும், 300 உத்தரவு நிறைவேற்று மனுக்களும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் நோக்கில் காணொலி வாயிலாக லோக் அதாலத் நடத்த சென்னையில் உள்ள மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
இதன்படி கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த நவம்பா் 25, 30 ஆகிய தேதிகளில் காணொலி மூலம் லோக் அதாலத் விசாரணை நடைபெற்றது. இதில் மொத்தம் 150 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 15 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.