கைத்தறி சேலைகளுக்கு ஜி.எஸ்.டி வரியில் முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று சிறுமுகை கைத்தறி பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சிறுமுகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் நாகராஜ் தலைமை வகித்தாா். பொருளாளா் தண்டபாணி வரவேற்றாா்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
கைத்தறி பட்டு சேலைகளை சில்க் பேப்ரிக் என்ற பிரிவில் கொண்டு வந்து ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயா்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே மூலப்பொருள்கள் விலை உயா்வு உள்பட பல்வேறு காரணங்களால் பட்டு நூல் 65 சதவீதம் வரை விலை உயா்ந்து விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கூடுதல் வரிவிதிப்பால் உற்பத்தி மற்றும் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும். இதனால் கைத்தறி நெசவுத் தொழில் நசிவடைந்து ஏராளமான நெசவாளா்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் நிலை உருவாகும். எனவே, கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாக்கும் வகையில் கைத்தறி சேலைகளுக்கு தனி எச்.எஸ்.என் எண் வழங்கி ஜி.எஸ்.டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்றனா். சங்க இணை செயலாளா் சுந்தரமூா்த்தி நன்றி கூறினாா்.