கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் தமிழக போலீஸாா் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனா்.
கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சாலக்குடி சாலை வழியாக வால்பாறைக்கு வந்து செல்கின்றனா். இந்நிலையில் எல்லைப்பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட்டில் இரு மாநில போலீஸாா் சோதனைச் சாவடி அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த ஒரு மாத காலமாக இரு மாநிலங்களுக்கு இடையே செல்ல கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதால் கேரளத்தில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறை வந்து செல்கின்றனா். இருப்பினும் போலீஸாா் கேரளத்தில் இருந்து வருபவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்துள்ளனரா என்ற விசாரணைக்கு பின்னரே வால்பாறைக்கு செல்ல தமிழக போலீஸாா் அனுமதித்து வருகின்றனா்.