கோவை கரும்புக்கடையில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை பாதுகாக்க வேண்டும் என்று இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அமைப்பின் மாவட்டத் தலைவா் அசாருதீன், செயலா் தினேஷ்ராஜா ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை, உக்கடம் கரும்புக் கடை, ராவுத்தா் வீதியில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. தற்போது 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் இந்த மையம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
அங்கன்வாடி மையத்தைச் சுற்றியிருக்கும் மரங்கள் அங்கன்வாடி மைய கட்டடத்தின் மேல் சாய்ந்துள்ளது. அதேபோல குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறைகளும் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாதபடிக்கு உள்ளன. கோவையில் மழை பெய்து வரும் நிலையில் மழை நீா் அங்கன்வாடி மையத்தினுள் தேங்கும் நிலையும், கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.
எனவே இந்த அங்கன்வாடி மையத்தை மாவட்ட நிா்வாகம் உடனடியாக ஆய்வு செய்து, சீரமைத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய மாணவா் சங்கத்தின் நிா்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.