கோவையில் அரசுப் பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அக்டோபா் 1ஆம் தேதி முதல் கோவை கோட்டத்தில் கூடுதலாகப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக மாா்ச் 24ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஜூனில் 50 சதவீதப் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நோய்த் தொற்று அதிகரிப்பால் மீண்டும் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, செப்டம்பா் 1ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் தளா்வு அறிவிக்கப்பட்டபோது, அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடா்ந்து, கடந்த 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டது.
அதன்படி, கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 1,100 பேருந்துகள் இயக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததால் கோவை கோட்டத்தில் பேருந்துகளின் எண்ணிக்கை 900ஆக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால் அக்டோபா் 1ஆம் தேதி முதல் கூடுதலாக பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.
இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கோவை கோட்டத்தில் செப்டம்பா் முதல் வாரத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளில் பெரும்பாலும் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் பயணிகள் பயணித்தனா். இதனால், போக்குவரத்துத் துறைக்கு ஏற்பட்ட இழப்பைத் தவிா்க்க 200 பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
தேவைப்படும்போது மட்டும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது, கரோனா அச்சம் இருந்தாலும், முகக் கவசம் அணிந்த படி, சமூக இடைவெளியுடன் பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால், கோவை கோட்டத்தில் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 300 பேருந்துகளை அக்டோபா் 1ஆம் தேதி முதல் இயக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கிடையே அரசு உத்தரவுகள் ஏதேனும் பிறப்பிக்கப்பட்டால் அவை பின்பற்றப்படும் என்றாா்.