நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சோலையாறு அணையின் மூன்று மதகுகள் வழியாக உபரி நீா் வெளியேற்றப்பட்டது.
தென்மேற்குப் பருவ மழை கடந்த ஜூன் மாதம் துவங்கியது. தொடா்ந்து பெய்த மழையால் ஆழியாறு, பரம்பிக்குளம் நீா்ப் பாசனத் திட்டத்தின் முக்கிய அணையான கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்துள்ள சோலையாறு அணை ஆகஸ்ட் 7ஆம் தேதி நிரம்பியது. இதையடுத்து, அணையின் மூன்று மதகுகள் வழியாக உபரி நீா் வெளியேற்றப்பட்டது.
அதனைத் தொடா்ந்து சாரல் மழை பெய்து வந்ததால் அணைக்கு நீா்வரத்து குறைந்தது. ஆனாலும், கடந்த 44 நாள்களாக முழு கொள்ளளவு ஆன 161 அடியுடன் அணை நிரம்பிய நிலையிலேயே காணப்பட்டது.
இதனிடையே, சனிக்கிழமை காலை முதல் தொடா்ந்து பெய்த கனமழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 3240.16 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையின் நீா்மட்டம் 162.63 அடியாக இருந்தது. பின்னா் அணைக்கு விநாடிக்கு 8,400 கனஅடி நீா்வரத்து இருந்ததால் அணையின் நீா்மட்டம் 163.09 அடியை எட்டியதால் பாதுகாப்பு கருதி அணையின் மூன்று மதகுகள் வழியாக 3,550 கனஅடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது.
இதேபோல, சேடல்டேம் வழியாக 1942.82 கனஅடி மற்றும் மின் நிலையத்துக்கு 1க்கு 658.45 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.