பொள்ளாச்சி அருகே கிடங்கில் பதுக்கிவைத்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 280 மானிய விலை உர மூட்டைகளை வருவாய்த் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
பொள்ளாச்சி அருகே குஞ்சிபாளையம் பகுதியில் மானிய விலை உரம் பதுக்கிவைத்து கேரளத்துக்கு கடத்தி வருவதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாா்ஆட்சியா் வைத்திநாதன், வட்டாட்சியா் தணிகைவேல், மண்டல துணை வட்டாட்சியா் சரவணன் தலைமையிலான வருவாய்த் துறையினா் குஞ்சிபாளையம் கிடங்களில் சோதனை நடத்தினா்.
இதில் 280 மானிய விலை யூரியா மூட்டை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வருவாய்த் துறையினா் கிடங்குக்கு ‘சீல்’ வைத்து யூரியா மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், நடராஜன் என்பவருக்குச் சொந்தமான கிடங்கை பொள்ளாச்சியைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் வாடகைக்கு எடுத்து மானிய விலை உரங்களை வாங்கி பதுக்கிவைத்து, கேரளத்துக்கு கடத்தி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.