கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனையில் முடிவுகள் வேறுபட்டதால் தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை, பீளமேட்டில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்கு கோவை மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனா நோய்த் தொற்று உறுதி பரிசோதனையும் இங்கேயே மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் இம்மருத்துவமனையில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜி.ரமேஷ்குமார், இணை இயக்குநர் கிருஷ்ணா ஆகிய அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.
மருத்துவமனையின் நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் கரோனா பரிசோதனையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 71 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவனையின் ஆய்வகத்தில் தரப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15 மாதிரிகளின் முடிவுகள் தனியார் மருத்துவமனையின் ஆய்கவ முடிவுகளுடன் மாறுபட்டுள்ளது.
கிட்டத்தட்ட 21 சதவீத மாதிரிகளின் முடிவுகள் வேறுபட்டுள்ளது. 15 சதவீதம் வரை வேறுபாடுகள் இருக்கலாம் என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் 15 சதவீதத்துக்கு மேல் தனியார் மருத்துவமனையின் முடிவுகள் மாறுபட்டதால் பொது சுகாதார சட்டம் 1939ன் படி விளக்கம் கேட்டு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜி.ரமேஷ்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இக்கடிதம் பெற்ற 2 தினங்களுக்குள் உரிய அதிகாரிகள் நேரில் வந்த விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவமனையில் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு துறைகளில் உரிய அங்கீகாரம் பெறாமல் 11 ஸ்கேன் இயந்திரங்கள் பயன்பாட்டில் இருந்தது தெரியவந்தது.
இந்த 11 ஸ்கேன் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் ஸ்கேன் இயந்திரங்களை பயன்படுத்தியதுக்கும் நிர்வாகம் சார்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.