கோவையில் கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் கேரள இளைஞர் பலியானார்.
கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்தவர் ஸ்டேன்லி மகன் லியோ ஸ்டேன்லி (27). கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் திருவணந்தபுரத்தைச் சேர்ந்த கோவிந்த் (27) வடவள்ளி பகுதியில் தங்கி அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கரோனா ஊரடங்கால் தற்போது இருவரும் வீட்டிலிருந்து பணியாற்றி வந்தனர்.
இதனால் கோவையில் தங்கியிருந்த அறையை காலி செய்துபொருள்களை எடுத்துச் செல்ல நேற்று கோவிந்தின் காரில் கோவை வந்துள்ளனர். வடவள்ளியில் பொருள்களை எடுத்துக் கொண்டு, ஈச்சனாரிக்கு காரில் வந்த போது, லியோ ஸ்டேன்லி காரை ஓட்டியுள்ளார். அப்போது ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே வந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை கார் கடக்க முயன்றதாகத் தெரிகிறது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் காரை ஓட்டி வந்த லியோ ஸ்டேன்லி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த கோவிந்த்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு வந்த மதுக்கரை காவல்துறையினர் லியோ ஸ்டேன்லி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..