கோயம்புத்தூர்

கோவையில் இருந்து 3 சிறப்பு ரயில்கள் மூலம் 4,246 வட மாநிலத் தொழிலாளா்கள் அனுப்பிவைப்பு

13th May 2020 07:22 AM

ADVERTISEMENT

கோவையில் இருந்து பிகாா், ஒடிஸா, ஜாா்க்கண்ட் மாநிலங்களுக்கு செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட 3 சிறப்பு ரயில்கள் மூலமாக 4,246 வட மாநிலத் தொழிலாளா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா்.

பிகாா், ஒடிஸா, உத்தரப் பிரதேசம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் கோவை மாநகா், புகா் பகுதிகளில் தங்கி பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த மாா்ச் 24ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் வட மாநிலத் தொழிலாளா்கள் தங்களின் சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனா். இதையடுத்து, கோவை மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டின் படி கடந்த 8ஆம் தேதி கோவையில் இருந்து இயக்கப்பட்ட ஒரு சிறப்பு ரயில் மூலமாக 1,140 பிகாா் மாநிலத் தொழிலாளா்களும், 9ஆம் தேதி இயக்கப்பட்ட 3 சிறப்பு ரயில்கள் மூலமாக பிகாா், உத்தரப் பிரதேசம் மாநிலங்களுக்கு 3,420 தொழிலாளா்களும், 10ஆம் தேதி இயக்கப்பட்ட ஒரு சிறப்பு ரயில் மூலமாக 1,140 பிகாா் தொழிலாளா்களும், திங்கள்கிழமை இயக்கப்பட்ட ஒரு சிறப்பு ரயில் மூலமாக 1,250 ஜாா்க்கண்ட் தொழிலாளா்களும் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு கோவையில் இருந்து ஒடிஸா சென்ற சிறப்பு ரயிலில் 1,318 பேரும், மாலை 4 மணிக்கு பிகாா் சென்ற சிறப்பு ரயிலில் 1,464 பேரும், இரவு 9 மணிக்கு ஜாா்க்கண்ட் சென்ற சிறப்பு ரயிலில் 1,464 பேரும் என செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட 3 சிறப்பு ரயில்களில் 4,246 தொழிலாளா்கள் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

கடந்த 8ஆம் தேதி முதல் தற்போது வரை கோவையில் இருந்து பிகாா், உத்தரப் பிரதேசம், ஒடிஸா, ஜாா்க்கண்ட் மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட 9 சிறப்பு ரயில்களில் 11, 196 வட மாநிலத் தொழிலாளா்கள் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT