கோவை: ஹோட்டல் கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் தளம் சரிந்த விபத்தில் தொழிலாளா்கள் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
கோவை, பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள தனியாா் இடத்தில் ஹோட்டல் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு 25க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு கான்கிரீட் தளம் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த பீளமேடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை நிலைய அலுவலா் முத்துக்குமாரசாமி தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்த விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ரூபேஷ் போரான் (25), உத்திரப்பிரதேசத்தைச் சோ்ந்த ராம்பிரகாஷ்(24), மேற்குவங்கத்தைச் சோ்ந்த ரஷீத் அலி (22) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் தொடா்பாக பீளமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.